கேரள சமூகத்தின் மறுமலர்ச்சி தந்தையாக போற்றப்படுபவரும் தமிழ்நாடு வாழ் இல்லத்துப்பிள்ளைமார்களின் குலகுருவாக மதிக்கப்படுபவருமான மகான் Shri. நாராயணகுரு குறித்து உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியில் போதுமான குறிப்புகளோ, தகவல் திரட்டுகளோ இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
கேரளா, கர்நாடகா, துளுநாடு, ஆந்திரா, இலங்கை என மற்ற தென்னிந்திய பகுதிகளில் மிகவும் மதிக்கத்தக்க அறிவுஜுவியாக அவர் அறியப்பட்டாலும் நம் தமிழ்நாட்டில் மதச்சார்பற்றவர்கள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள், திரு. நாராயணகுரு அவர்களையும் அவரது கருத்துகளுக்கும் போதிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்துவருவது நீண்ட நாட்களாகவே நடந்து வருகிறது. விளைவாக பெரும் சமூக மறுமலர்ச்சி புரட்சியாளரான திரு. நாராயணகுரு சாமியாராக மட்டுமே தமிழ் மக்களிடம் சென்று சோ்ந்துள்ளார். எனவே, நாராயணகுருவையும் அவரது சிந்தனைகளையும் தமிழ் மக்களிடத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த வலைதளம் உருவாக்கப்படுகிறது.
திரு. நாராணகுரு அவர்கள் "வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த" (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்ற வார்த்தை பிரயோகத்தில் எமக்கு உடன்பாடு இல்லை.!) ஈழவ/இல்லத்தார் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் தன்னை சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றே தன்னை அறிவித்துக்கொண்டார். எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமைகளான கல்வி, தெய்வ வழிபாடு கிடைக்க வேண்டும் என தனது இறுதி மூச்சு வரை போராடி வென்று மறைந்தார். அவருடைய சிந்தனைகளையும் அவரது வரலாற்று நிகழ்வுகளையும் அவர் பிறந்த ஈழவ/இல்லத்தார் சமூகத்தின் வரலாற்று பெருமைகளையும் தகவல்களாக தொகுத்து வழங்கும் நோக்கத்தில் இந்த வலைதளம் உருவாக்கப்படுகிறது. நாராயணகுரு அவர்களின் அபிமானிகளும், அவரது பக்தர்களும் இந்த வலைத்தளத்தை தொடர்ந்து பின்பற்றி ஆதரவு தர வேண்டப்படுகிறது.
எத்திசையும் குரு புகழ் பரவட்டும்.!
- Sree Narayana Tamil (16/12/2024)
கருத்துகள்
கருத்துரையிடுக