நாராயணகுரு கேரளாவில் பிறந்து மலையாள மக்களின் வாழ்கையை உயர்த்திய மகான் என்பதாக மட்டுமே நமக்கு அவரைத் தெரியும். ஆனால் நாராயணகுருவின் வாழ்கையின் பெரும்பங்கை செதுக்கியது நம் தமிழ்நாட்டு மண் தான் என்பதும், அவரது ஆன்மீக சிந்தனைகளுக்கு அடித்தளமிட்டது நம் தமிழ் மண்ணின் மகத்தான ஆளுமைகள் தான் என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத பேருண்மையாகும்.
நாணுவின் பிறப்பு:
மலையாள நாட்டில் திருவனந்தபுரம் நகருக்கு அருகில் செம்பழந்தி
என்னும் அழகிய சிற்றூரில் வயல்வாரம் என்னும் வீட்டில் ஆயுர்வேத வைத்தியரான மாடன்
ஆசானுக்கும் – குட்டிஅம்மைக்கும் மகனாக பிறந்தார் நாராயணகுரு. தந்தை மற்றும்
தாய்மாமா வழங்கிய இளவயது குருகுல கல்வியால் நாராயணகுரு தமிழ் மற்றும்
சமஸ்கிருதத்தில் மிகுந்த புலமை பெற்றார். மற்ற ஈழவ சமூகத்தினர் ஆயுர்வேத
மருத்துவத்திற்கு மட்டும் சமஸ்கிருதத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில் நாராயணகுரு
வேத கருத்துகளையும் சுலோகங்களையும் சமஸ்கிருதத்தில் படித்து தோ்ந்தார். பின்னர், தமிழர் தைக்காடு அய்யவு மூலம் தமிழின் ஆகச்சிறந்த அறநூல்களான திருக்குறள்
மற்றும் இதர சிவ வழிபாட்டு நூல்களை கற்றுத் தோ்ந்து அதில் ஆழந்த புலமை அடைந்தார்.
மருந்துவாழ் மாமலையில் கடும் தவம்:
நாராயணகுருவின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை
ஏற்படுத்தியது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கு அடுத்து
மருந்துவாழ் மாமலையில் அவர் சுமார் 8 ஆண்டுகள் மேற்கொண்ட கடும் தவம் ஆகும். புத்தருக்கு போதி மரம் ஞானத்தை
வழங்கியது போல நாராயணன் ஆசானை நாராயணகுருவாக உயர்த்தியது நம் தமிழ்நாட்டின்
கன்னியாகுமரி முக்கடல் எல்லைக்கு அருகே அமைந்துள்ள மருந்துவாழ்மலை என்று சொன்னால்
அது மிகையாகாது. அந்த மலையின் உச்சியில் நின்று பார்த்தால் முக்கடல்களையும் ரசிக்க
முடியும். தென்இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் இடமே அந்த
மருந்துவாழ் மலைதான். அதன் உச்சியில் இருந்து கொண்டுதான் எட்டு ஆண்டுகள் கடுமையான
தவத்தை மேற்கொண்டு நாராயணகுருவாக எழுந்தார் குரு.
அருவிப்புரம் சிவபிரதிஷ்டை:
குமரியில் கடும் தவத்தை மேற்கொண்ட பின்னர் அவர் நேராக
சென்றது அருவிப்புரம் என்ற ஊருக்கு. அங்கே பொதிகை மலையிலிருந்து தெற்கு நோக்கி
பாயும் நதியான நெய்யாறு நதியில் மூழ்கி தமிழர்களின் ஆதி தெய்வமான சிவலிங்கத்தை
எடுத்து அனைத்து மக்களும் வேறுபாடுகள் இன்றி வழிபடுவதற்கு ஒரு சிவன் கோவிலை
நிர்மாணித்தார். நாராயணகுருவின் அந்த செயல்பாடு கேரள, தென்தமிழ்நாட்டு வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு.!
திருக்குறள், தேவார பதிகங்கள்:
தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த நாராயணகுரு
திருவள்ளுவரின் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். தூய தமிழில் தேவார
பதிகங்கள் என்ற ஆன்மீக பாடல் நூலினை குரு படைத்துள்ளார். சிதம்பரம் கோவிலுக்கு
வந்த குரு, அந்த கோவிலின் பிரம்மாண்டத்தை உணர்ந்து சிதம்பரட்ஷகம் என்று
சமஸ்கிருத ஸ்லோக நூலினை இயற்றியுள்ளார். இது தவிர ரமண மகரிஷி, குன்றக்குடி ஆதினம், கோவிலூர் ஆதினம், மதுரை, திருச்செந்தூர் சித்தாந்த மடங்கள், திருநெல்வேலி, கோட்டாறு ஆகிய இடங்களில் கோவில் என
தமிழ் மண்னை சுற்றி சுழன்று வாழ்ந்து மறைந்துள்ளார் குரு.
மலையாள நாட்டில் பிறந்து தமிழ் மண்ணின் தத்துவ மகனாக
வாழ்ந்து தென்னிந்தியா முழுவதும் செழிக்க பாடுபட்டு மறைந்துள்ளார் மகாகுரு.!
-
வாழிய அவர்தம் புகழ்.!
- Sree Narayana Tamil (19/12/2024)
கருத்துகள்
கருத்துரையிடுக